
திருவாளர் மங்
அன்பு நிறைந்த அப்பால்தமிழ் வாசகர்களுக்கு எனது வணக்கம்!
அப்பால்தமிழில் பிரசுரமாகும் எனது ஆக்கங்களைப் படித்த உங்களில் பலர் எனக்களித்து வரும் ஆதரவுக்கும் உற்சாகத்துக்கும் மிக்க நன்றி! உங்களது வேண்டுகோளுக்கு இணங்க நான் புதியதொரு கதையை, அதாவது இதுவரை வெளியிடப்படாத கதையொன்றை, அப்பால்தமிழில் தொடர்ச்சியாக எழுத எண்ணினேன். நண்பர் கி. பி. அரவிந்தன் எப்போதும் போலவே எனக்கு உற்சாசமூட்டி எழுதுவதற்கு இடமளித்துள்ளார். அவருக்கும் அப்பால்தமிழ் குழுமத்துக்கும் எனது மனமுவந்த நன்றிகள்!
இக்கதை முன்பு வெளியிடப்படாத புதுக்கதை என்பது உண்மைதான். ஆனால், இதுவும் நான் ஏறத்தாழ 30 வருடங்களுக்கு முன்னர் நான் எழுதி வெளியிட முயன்று தோற்றுப்போன கதை! முதலில் வீரகேசரி தாபனம், இக் கதை இலங்கை அரசியல்வாதிகளையும், இன்னும் பலரையும் தொட்டுச் செல்லும் காரணத்தினால், பிரசுரம் செய்ய முன்வரவில்லை.
எனது அடுத்த முயற்சியாக ‘சிரித்திரன்’ ஆசிரியர் திரு. சிவஞானசுந்தரத்திடம் இக் கதையைக் கொடுத்தேன். அவர், தான் எப்போதுமே, தனது பத்து வயதான (1978ல் என எண்ணுகின்றேன்) மகளிடம் கொடுத்துப் படித்துப் பார்க்க வைத்து, அவர் கதை நன்றாக இருக்கின்றதெனச் சொன்னால் சிரித்திரனில் பிரசுரிப்போம் என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
நான் பின்னர் அவரிடம் சென்றபோது அவர் சற்று மனம் சோர்ந்தவராக என்னை வரவேற்றார். ‘எனது மகள், கட்டாயமாக இக் கதையைப் பிரசுரிக்க வேண்டுமெனச் சொல்கின்றாள். ஆனால் நீங்கள் இக்கதையில் சமூகத்தில் உள்ள பலரையிட்டு மிகத் தாராளமாகவே விமரிசித்து எழுதியுள்ளீர்கள். நன்றாகவும், நகைச்சுவையாகவும் இருக்கின்றதுதான். ஆனால், என்னால் இக்கதையை பிரசுரிக்க முடியாமைக்கு வருந்துகின்றேன்,’ என்றார்.
பின்னர், தனது நண்பர் ஒருவருக்கு படிக்கக் கொடுப்பதற்காக முல்லையூரான் இக் கதையை என்னிடமிருந்து பெற்றுச் சென்றார். இதையடுத்து எனக்கு நாட்டைவிட்டு வெளியேறவேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்படவே 42 வயதில், 22 வருடமாக நான் வகித்த ஆசிரியர் பதவியையும் தலைமுழுகிவிட்டு, ஒருவாறு 1984 ல் டென்மார்க் வந்துவிட்டேன். முல்லையூரானும் சில வருடங்களில் டென்மார்க்குக்கு வந்துவிட்டார். ஆனால், எனது கதை வற்றாப்பளையில் முல்லையூரான் வீட்டில் முடங்கிப்போய்விட்டது. பின்னர் ஏற்பட்ட இடப்பெயர்வுகளில் அதற்கு என்ன நேர்ந்தது என்றே தெரியாமற் போய்விட்டது. அதை மீட்டெடுக்க இப்போது முல்லையூரானும் இவ்வுலகில் இல்லை.
அப்பால் தமிழுக்குப் புதிதாக ஒரு கதையை எழுதவேண்டும் என எண்ணியபோது இந்தக் கதைதான் என் மனதில் வந்தது. இக் கதையை என்னை ஆரம்பத்தில் எழுத வைத்தது, வட இந்திய எழுத்தாளர் கிருஷன் சந்தர் எழுதிய ‘Mr. Ass comes to Delhi’ என்ற நாவல்தான். இதையிட்டு நான் இங்கே விபரித்தால் நான் எழுதும் கதையின் சுவாரஷ்யம் குறைந்துவிடும்.
ஆயினும் அக் கதை வேறு, எனது கதை வேறு என்பதை இரண்டையும் படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். அந்தக் கதை என்னைப் புதியதொரு கோணத்தில் சிந்திக்க வைத்தது. அவ்வளவுதான்.
30 வருடங்களின் பின்னர் இக்கதையைப் புதிதாக எழுதுவதில் ஒரு சிறப்பு என்னவெனில் எனது வயது, அனுபவ முதிர்ச்சி என்பவை இக்கதையில் பிரதிபலிக்கின்றன என்பதுதான். இவையிரண்டுமே கதை சிறப்பாக அமைவதற்கு உத்தரவாதமில்லை என்பது உண்மைதான். ஆயினும் எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலின் காரணமாகவே இதை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். படைப்பு சிறந்ததெனில் அது காலத்தைத் தாண்டியும் வாழும். இல்லையேல் இலகுவாக மறக்கப்படும்.
இந்தக் கதை வாசகர்களைச் சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் செய்யும் என நம்புகின்றேன்.
எனது அன்பு வாசகர்களுக்கும், அப்பால் தமிழ் குழுமத்துக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
பணிவன்புடன்,
பாலமனோகரன்


