வயலும் வாழ்வும்

போர் மற்றும் அதன் அதிகாரத்திடம் காலம் தொடர்ந்து நசிபடுகிறது. தப்ப முடியாமல் சனங்களை வதைக்கிறது. எதிர்பார்ப்புக்களை தின்று அவலங்களை புதுப்பிக்கிற அதன் கோரப் பசியால் வாழ்வு பற்றிய ஆசை யாருக்குமில்லை.“நாட்டு நிலமையை யோசித்தால் அது வேறு கவலை நீங்கள் எல்லாம் வந்து போகக்கூடிய நிலமை எப்போ வரும் என்ற ஏக்கம்” இந்த தீராத பசியிடம் நல்ல பதில்கள் வரமாட்டாது. வர முடியாது என்ற நம்பிக்கையற்ற தன்மை வெளிப்படுகிறது. எல்லாருமே போய்க்கொண்டிருக்க யாரால் திரும்பிவர முடியும். அல்லது திரும்பி வருவது பற்றி யோசிக்க முடியும். மண்ணைப் பிரிந்த மாதுமையின் வலி அம்மாவின் கடிதத்தில் முழுவதும் வதைபடுகிறது.

மாலதி பாரிஸ் நகரை அண்டிய புறநகர்ப் பகுதியில் கடந்த பத்தாண்டு காலமாக வாழ்ந்து வருகிறாள். இங்கு வந்து பெரிதாக வேலை என்று பார்த்ததில்லை. ஆனால் தாயகத்தில் நீண்ட காலம் வேலை பார்த்த அனுபவம் அவளுக்கு உண்டு. அந்த அனுபவம் இந்த நாட்டிற்கு உதவாது. என்றாலும் மனதிற்குள் ஓர் உழைச்சல். ஐந்து வயதில் பாடசாலைக்குப் போனதிலிருந்து தொடர்ந்து படிப்பு பின்னர் வேலை என்றிருந்த அவளுக்கு பிரான்சுக்கு வந்து வீட்டிற்குள் இருப்பது மனஅழுத்தத்தைத் கொடுத்தது.