போரும் வாழ்வும்

தினமும் கிடைக்கும் வன்னிச் செய்திகள் மனதை பிழிந்தெடுக்கின்றன. உடனே நண்பர் கருணாகரன் எப்படி இருக்கின்றாரோ! திருமாஸ்டர் எப்படி இருப்பார், திருவையாறில் இருந்த நிலாந்தன் எங்கிருப்பார். அமரதாஸ், வளநாடன், இனுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் அவர்கள் எல்லாம் என்னவானார்கள், எங்கிருக்கிறார்களோ. ஒவ்வொரு முறை வன்னிச் செய்திகளை கேட்க நேரும் போதெல்லாம் இப்படித்தான் மனதில் எண்ணங்கள் எழும். ஆனால் இவர்கள் மட்டுமா எனது உறவுகள். அங்கு மரத்தின் கீழ் மழை பெய்தால் ஒதுங்குவதற்குக் கூட இடமில்லாமல் அல்லல்படும் இலட்சக்கணக்கான மக்கள் அனைவரும்தானே நமது உறவுகள். என்ன செய்வது மனித மனம் என்னதான் விசாலமான பார்வைகளை சேமித்துக் கொண்டாலும் சில வேளைகளில் அதனையும் கடந்து நமக்கு நெருக்கமான உறவுகளை தேடத்தான் செய்கிறது. நமக்கு நெருக்கமானவர்களுக்கு என்ன நடந்திருக்குமோ என்று மனம் பதறுகிறது.