அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 20 July 2025

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow நிலக்கிளி arrow நிலக்கிளி அத்தியாயம் - 06
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிலக்கிளி அத்தியாயம் - 06   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Sunday, 13 March 2005

6. 

அந்த மங்கல நிகழ்ச்சியின் பின்னர் இரண்டு நாள்வரை பதஞ்சலி சற்று அடக்கமாக இருந்தாள். மூன்றாம் நாள் அவளுடைய பழைய துருதுருப்பும் துடுக்குத்தனமும் திரும்பிவிட்டன. பாவாடையை உயர்த்திக் கட்டிக்கொண்டு, கரம்பைக்காய் பிடுங்கவும், சூரைப்பழம் பறிக்கவுமென்று பட்டாம்பூச்சிபோல் இங்குமங்குமாய்ப் பறக்கத்தொடங்கி விட்டாள். உமாபதியார் தடுத்துக் கூறினால் 'சும்மா போணையப்பு!" என்று செல்லமாகக் கூறிவிட்டுத் தன்போக்கில் போய்விடுவாள்.

அவளுக்கு மங்கல நீராட்டு வைபவம் நடந்த அன்று கதிராமன் அவள் வீட்டில் நடந்த விருந்துக்குப் போகவில்லை. அன்று மதியம் திரும்பிய பின்னரே, அவன் காட்டில் குழுவாகத் திரிந்த கடாவைப் பிடித்துத் தங்கள் எருமையுடன் பிணைத்துக்கொண்டு வளவுக்கு வந்திருந்தான். அதன்பின் இரண்டு நாட்கள் பதஞ்சலியும் வெளியே எங்கும் செல்லாததால், அவளை அவனால் காணமுடியவில்லை. மூன்றாம் நாள் கதிராமன் விறகுக்காகக் காட்டுக்குப் போய்விட்டுக் கோடரியும் கையுமாகத் திரும்பும்போதுதான், அவள் குளக்கட்டின்மேல் வந்து நின்றுகொண்டு துருசினூடாகத் தண்ணீர் பாய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுடன் கூடவந்த நாய்களிரண்டும் பதஞ்சலியைத் தொலைவில் கண்டதும் உற்சாகத்துடன் அவளை நோக்கிப் பாய்ந்தன.

பதஞ்சலியைத் தனது நாய்கள் குளக்கட்டிலிருந்து கீழே தள்ளிவிடக்கூடும் என்று எண்ணிப் பயந்த கதிராமன் நாய்களை அதட்டினான். அவனுடைய அதட்டலுக்கு அடங்கிய நாய்கள் மீண்டும் அவனிடம் ஓடவே, பதஞ்சலியும் அந்தத் திக்கில் திரும்பினாள்.

இளஞ்சிரிப்புடன் வந்துகொண்டிருந்த கதிராமனின் கரியமேனி மாலை வெய்யிலில் புதியதொரு அழகைக் காட்டியது. அவனை அந்நேரத்தில் பார்த்தபோது பதஞ்சலிக்கு முன்னொரு தடவை, கலிங்கு வெட்டையில் இதேபோன்று ஒரு மாலைநேரம் தான் கண்ட கலைமரையின் ஞாபகம் திடீரென வந்தது. 'இவரும் நெடுகக் காட்டிலை சந்தோசமாய்த் திரியிறார் அந்த மரையைப்போலை' என எண்ணிக் கொண்டவளுக்கு, அவன் அன்று தங்கள் வீட்டுக்குச் சாப்பிட வராததது நினைவுக்கு வந்தது. அவன் அண்மையில் வந்ததும், 'ஏன் அண்டைக்குச் சாப்பிட வரேல்லை?' என்று அவனைக் கேட்டாள். அதற்கு அவன் பதிலளியாது புன்னகை பூக்கவே அவளுக்கும் சிரிப்பு வந்தது. 'நீங்கள் எதுக்கெண்டாலும் சிரிச்சுச் சாமாளிச்சுப் போடுறியள்!' என்ற பதஞ்சலியைச் சமாளிக்கும் நோக்குடன் கதிராமன், 'அண்டைக்கு உன்ரை வீட்டை நான் வாறதெண்டால் உனக்கேதும் கொண்டு வந்திருக்கோணும். என்னட்டை ஒண்டுமில்லை, அதுதான் வரேல்லை!' என்றான். 'அப்ப இனிமேல் வாறதெண்டால் ஏதாவது சாமான் வாங்கிக்கொண்டுதான் வருவியளாக்கும்?' அவள் குறும்பாகக் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் சிரித்தான் கதிராமன். அவளுடைய துடுக்கும் குறும்பும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன.

'சரி! இப்ப ஒரு சமான் தரவோ?"
'என்ன, உங்கடை கோடாலியைத் தூக்கித் தரப்போறியளே!'. அவள் அவனைக் கேலி செய்தாள்.

'நீயேன் கனக்கப் பகிடி பண்ணிறாய், என்னோடை கொஞ்சத்தூரம் உந்தக் காட்டுக்கை வா! ஒரு இனிப்பான சாமான் தாறன்!, என்றவாறே அவன் திரும்பிக் குளக்கட்டால் நடந்தான்.

'என்ன? இனிப்பான சாமானோ? என்னது?, என்று ஆர்வத்துடன் கேட்டவாறே துள்ளிக்கொண்டு அவனைப் பின்தொடர்ந்தாள் பதஞ்சலி.

சற்றுத்தூரம் குளக்கட்டுவழியே சென்ற கதிராமன், ஓரிடத்தில் குளக்கட்டின் சரிவால் இறங்கிக் கட்டின்கீழே தெரிந்த காட்டை நோக்கிச் சென்றான். அக் காட்டினுள் நுழைந்தவன் சிறிது தூரம் சென்றதும், பட்டுப்போய் விழுந்துகிடந்த ஒரு சமண்டலை மரத்தடிக்குச் சென்று, அதன் அடிப்பாகத்திலிருந்த பூவாசலைக் கவனித்தான். இதற்குள் பதஞ்சலியும் அவனருகில் நெருங்கி வந்துவிடவே, கொட்டுக்குள் இருந்த தேன்குடி கலைந்து பறந்தது.

பதஞ்சலி குதூகலத்துடன் குதித்தாள்.

'ஆ! எனக்கு இப்பதான் விளங்கிச்சுது!'

'சும்மாய் குதிக்காதை! அங்காலை போய் நில்! இல்லாட்டிப் பூச்சி குத்திப்போடும்!' என்று கதிராமன் கூறிவிட்டுப் பூவாசலுக்கு மேல் கோறையாகச் செல்லும் பகுதியை இலேசாகத் தட்டிப் பார்த்தபின், மரத்தைத் தறிக்கத் தொடங்கினான். நாய்களிரண்டும் உடும்போ ஏதோவென்று உஷாராகிக் கொண்டன. 'கவனம்! பூச்சி குத்திப்போடும்!' என்று பதஞ்சலி கூறியதைக் கவனியாது அவன் குனிந்து, வெட்டப்பட்டிருந்த வெளியினூடாக வாயால் ஊதினான். அவன் ஊதவும் தேனீக்கள் தாம் மொய்த்திருந்த வதைகளைவிட்டு மேலே கொட்டுக்குள் போய்க் குவிந்து கொண்டன. அவன் கொட்டுக்குள் மெல்லக் கையைவிட்டு தேன்வதைகளை எடுத்தவாறே பதஞ்சலியை அருகில் அழைத்தான். வெள்ளை வெளேரென்று, இடியப்பத் தட்டுக்களைப்போல் வட்டவடிவமாக இருந்த அவற்றை எடுத்துப் பதஞ்சலியின் விரிந்த கைகளுக்குள் வைத்தான். தேன்வதைகளை அவள் கண்டிருக்கின்றாள். ஆனால் அவை இவ்வளவு ஒரே சீரான வட்டக் கட்டிகளாய் இருந்ததில்லை.

'இதைத்தான் பணியார வதை எண்டு சொல்லுறது' என்ற கதிராமன், அவளுடைய கைநிறையத் தேன்வதைகளை அடுக்கிவிட்டு, 'போதுமே என்ரை பரிசு?' எனக் கேலியாகக் கேட்டான். அவள் 'ஓ' வென்று தலையை அசைத்துவிட்டு அழகாகச் சிரித்தாள்.

அவள் சிரிக்கையில் அன்றொருநாள் இருண்ட காட்டில் அவனுக்கு மிக நெருக்கத்தில் அவள் இருந்த நினைவு கதிராமனுக்கு வந்தது. அவளுடைய சிவந்த விரல்களையும், செழுமையான முகத்தையும், வண்டுபோன்ற விழிகளையும் பார்க்கையில் அவனுக்குப் புதியதோர் உணர்வும் சுகானுபவமும் ஏற்பட்டன.

'வாருங்கோ குளக்கட்டிலை வைச்சுத் தின்னுவம்!' என்று கூறி அவள் நடக்க, கதிராமன் இரண்டு சமண்டலை இலைகளைப் பறித்துக்கொண்டு, அவள் பின்னால் சென்று குளக்கட்டின் சரிவில் பசுமையாகப் படர்ந்திருந்த புல் தரையில் அமர்ந்து கொண்டான். சமண்டலை இலைகளில் தேன்வதைகளை வைத்து அவனுக்குக் கொடுத்துவிட்டுத் தானும் எடுத்துக் கொண்டாள் பதஞ்சலி. அவளுடைய தளிர் விரல்களினால் பிய்த்தெடுக்கப்பட்ட அந்தத் தேன்வதைகள் அவனுக்கு அன்று மிகவும் இனித்தன.

பொழுது சாயும் நேரத்திலே பதஞ்சலி நாய்களுடன் முன்னால் துள்ளிக்கொண்டு ஓட, கோடரியைத் தோளில் தாங்கி கதிராமன் பின்தொடர்ந்தான். பதஞ்சலி ஓடும்போது அவளுடைய நீண்ட பின்னல் கருநாகம்போல் அங்குமிங்கும் துள்ளியசைந்தது. அவளுடைய ஒவ்வொரு அங்க அசைவும், களங்கமும் கவலையுமற்ற கதிராமனின் வாலிப இதயத்தில் மிகமிக ஆழமாகப் பதிந்து கொண்டன.

தன் வளவுக்கு எதிரேயுள்ள வயல்வரம்பில் புல்வெட்டிக் கொண்டிருந்த கோணாமலையர் தொலைவில் நாய்கள் ஓடிவரும் அரவம் கேட்டு நிமிர்ந்தார். மாiலை வெய்யிலில் கண்கள் கூசின. விழிகளை இடுக்கிக்கொண்டு பார்த்தபோது கதிராமனும், பதஞ்சலியும் வருவது தெரிந்தது. பார்த்தவர் மீண்டும் குனிந்துகொண்டு பசும்புற்களைப் பரபரவென்று அறுத்துத் தள்ளினார். மிகவும் கூர்மையான அரிவாளினால் பழகிப்போன அவருடைய கரங்கள் மளமளவெனப் புல்லை அரிந்து தள்ளும்போது அவருடைய மனம் மட்டும் வேறு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தது.

சாக்கில் அடைந்து கொண்டுவந்த புல்லை மாட்டுத் தொட்டிலுக்குள் கொட்டிவிட்டு கோணாமலையர் வாய்க்காலில் கால்முகம் கழுவிய பின்னர் வந்து முற்றத்தில் கிடந்த மான்தோலில் உட்கார்ந்து கொண்டார். அவருடைய ஒரு கையில் சீனியையும், மறுகையில் சிரட்டை நிறையத் தேநீரையும் கொடுத்த பாலியார், வெற்றிலைத் தட்டத்துடன் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

உள்ளங்கையிலிருந்த சீனியை நக்கிக்கொண்டு ஒருவாய் தேநீரை உறிஞ்சிய மலையர் ஏதோ நினைத்தவராய், 'உவன் உமாபதியின்ரை பொட்டை இப்பவும் காடுவழியதானே திரியிறாள்! அவளைக் கண்டபடி வெளியிலை விடவேண்டாமெண்டு அவனுக்குச் சொல்லு!' என்றார். அவர் எதற்காக இதைக் கூறுகின்றார் என எண்ணிய பாலியார், 'அந்த ஆளும் நெடுகச் சொல்லுறதுதான். ஆனால் அவள் கேட்டால்தானே! மான்குட்டி மாதிரி எந்த நேரம் பாத்தாலும் பாய்ச்சலும் பறவையுந்தான்!' எனக் கூறிக் கொண்டாள். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டது பதஞ்சலியின் துடியாட்டத்தைப் பற்றித்தான். ஆனால் மலையர் நினைத்துக் கூறியதற்கும், அவருடைய மனைவி குறிப்பிட்டதற்கும் எவ்வளவோ வேறுபாடு இருந்தது.

தேநீரைக் குடித்துவிட்டுச் சிரட்டையை ஒரு பக்கமாகக் கவிழ்த்து வைத்த மலையர், 'காலமை மம்மது காக்கா என்னட்டை ஒரு விசயம் பறைஞ்சவன். குமுளமுனைச் சிதம்பரியருக்கு ஒரு பொட்டை இருக்குதாம். வீடுவளவோடை சிதம்பரியாற்றை உழவுமெசினும் பொடிச்சிக்குத்தான் குடுக்கிறதாம். எங்கடை கதிராமனுக்கு அந்தப் பொட்டையைச் செய்யிற விருப்பம் சிதம்பரியாருக்கு இருக்காம் எண்டு மம்மது சொன்னான்.... ஆனால் பொட்டைக்குக் கொஞ்சம் வயசு குறைவு... வாறவரியம் மட்டிலை செய்வம் எண்டு கதைச்சவராம்...' என்று கூறி நிறுத்தினார்.

அதற்கு ஒன்றுமே பேசாமல் எழுந்த பாலியார் சிரட்டையை எடுத்துக் கொண்டு குடத்தடிக்குச் சென்று குடத்திலிருந்து தண்ணீரை ஊற்றிச் சிரட்டையை அலம்புகையில், தூரத்தே உமாபதியரின் குடிசையில் பதஞ்சலி விளக்கேற்றுவது தெரிந்தது. '.... என்னமாதிரி பம்பரம்போலை சுழண்டு சுழண்டு வேலை செய்வாள்.... கிளிக்குஞ்சு மாதிரிப் பொட்டை..' எனப் பாலியாரின் மனம் எண்ணிக்கொண்டது.

(வளரும்)

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sun, 20 Jul 2025 00:52
TamilNet
The JVP has recently lent itself to US efforts to consolidate the unitary state and realise its long-held ambition to capture state power in Colombo. In this regard, they have also engaged with a range of actors, from the IMF, Washington, and New Delhi, as well as attempted to woo Eezham Tamils and other Tamil-speaking people to opt for the NPP in the 2024 SL Presidential Elections. Norway-based Eezham Tamil anthropology scholar Dr Athithan Jayapalan writes that the NPP and Lionel Bopage speak of equality without addressing the right of an oppressed nation to secession in the face of national oppression and genocide. Instead, the NPP, aligned with the US position, vows to neutralise the Eezham Tamil political struggle for self-determination.
Sri Lanka: JVP always denied Eezham Tamils?inalienable self-determination: Anthropology scholar


BBC: உலகச் செய்திகள்
Sun, 20 Jul 2025 00:52


புதினம்
Sun, 20 Jul 2025 00:55
















     இதுவரை:  27189520 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2919 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com