அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 10 February 2025

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow நிலக்கிளி arrow நிலக்கிளி அத்தியாயம் - 20-21
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிலக்கிளி அத்தியாயம் - 20-21   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Monday, 06 June 2005

20.

புத்தம் புதிய அனுபவங்களைக் கண்டு வியப்பும், மயக்கமும், மகிழ்ச்சியும் வேதனையும் கலந்ததோர் உணர்ச்சிக் கதம்பமாள் மணம் பரப்பிய பதஞ்சலி, கதிராமனின் அணைப்பிலே பச்சைக் குழந்தையாய் உறங்கிக் கொண்டிருந்தாள். கீழ்வானம் சிவக்கும் வைகறைப் பொழுதிலேயே விழித்துக்கொண்ட கதிராமன் பதஞ்சலியின் அணைப்பிலிருந்து தன்னை மெல்ல விடுவித்துக்கொண்டு எழுந்தான்.

அன்று பகலுக்குள் எத்தனையோ வேலைகளைச் செய்துமுடிக்க வேண்டியிருந்தது. உமாபதியரின் மண்வெட்டி, கோடரி முதலியவற்றை அவன் எடுத்து ஒவ்வொன்றாகக் கவனித்தான். ஆயுதங்கள்தான் ஒரு தொழிலாளியினுடைய உற்ற நண்பர்கள். உறுதியும், கூர்மையுமாய் விளங்கிய ஆயுதங்களைக் கண்டதும் கதிராமனுடைய தேகத்தில் புதுத்தெம்பு பாய்ந்தது.

வாழ்வதற்கு ஒரு குடிசை வேண்டும். அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்ய ஒரு காய்கறித் தோட்டம் வேண்டும். இவற்றைவிட முக்கியமாக, கமஞ்செய்ய விளைநிலம் வேண்டும்.

அவன் எதிரே அவனைப் பேணிவளர்த்த செவிலித் தாயான முல்லையன்னை, வளமிக்க மண்ணைத் தன்னகத்தே கொண்டவளாய், 'வா! வந்து என்னைப் பயன்படுத்தி வாழ்ந்துகொள்!" என்று அழைப்பது போன்றிருந்தது. கையிலே சிறந்த ஆயுதங்கள், உடலிலே வினைமுடிக்கும் திறமை, நெஞ்சிலே வாழவேண்டுமென்ற வேட்கை என்பனவற்றைக் கொண்டிருந்த கதிராமன் சுருதியாகக் காரியத்தில் இறங்கினான்.

தன்னை மறந்து, அயர்ந்து உறங்கிய பதஞ்சலி, அவன் காட்டிலே வெட்டிய கம்பு தடிகளைச் சுமந்துவந்து நிலத்தில் போட்ட ஓசையில் திடுக்குற்று விழித்துக் கொண்டாள். அதிகாலைப் பொழுதில் தனக்கு முன்னரே எழுந்து வேலையில் மூழ்கிச் சிரித்தபடியே நிற்கும் கணவனைப் பார்த்தபோது பதஞ்சலியை வெட்கம் பிடுங்கித்தின்றது. சரேலென்று எழுந்துகொண்ட அவள் வாய்க்காலண்டைக்கு ஓடினாள். 'இண்டைக்கு விளையாடிக்கொண்டு நிக்க நேரமில்லை! கெதியிலை தேத்தண்ணியை வை! வெய்யில் ஏறமுதல் குடிலைக் கட்டிப்போட்டு குமுளமுனைக்கு கிடுகு வாங்கப் போகோணும்!" என்ற கதிராமன், அந்தச் சுற்றாடலில் வசதியானதொரு மேட்டுநிலத்தைத் தேர்ந்தெடுத்துத் துப்பரவு செய்வதில் முனைந்தான். மண்ணும், மண்வெட்டியும் அவன் எண்ணப்படியெல்லாம் இசைந்து கொடுத்தன. மண்ணைத் தோண்டி ஆழமான குழி பறித்தான். அவற்றில் உறுதியான கப்புக்களை நாட்டினான். அவனருகே தேநீர் கொண்டுவந்த பதஞ்சலியிடம், 'எப்பிடி எங்கடை வீடு?" என்று கூறியபோது, அவள் கண்களில் பெருமை பொங்கி வழிந்தது.

'இதிலைதான் வீடும் தோட்டமும். பங்கை அதிலை பள்ளக் காணியாய்க் கிடக்குது காடு, அதை வெட்டி எரிச்சுத்தான் வயலாக்கப் போறன்!". தேநீரை உறிஞ்சிக் குடித்தவாறே அவன் தன் திட்டங்களைத் தனக்கேயுரிய எளிமையான முறையில் விளக்கிக் கொண்டிருந்தான்.

பதஞ்சலிக்கும் அந்த இடம் மிகவும் பிடித்திருந்தது. அருகே சலசலத்தோடும் வாய்க்கால், அதற்கப்பால் விரிந்து கிடக்கும் வயல்வெளி, இவற்றைச் சூழ்ந்து கிடக்கும் இருண்ட காடு, இவையெல்லாமே அவளுக்குச் சந்தோஷத்தை அளித்தன. இவை எல்லாவற்றிற்கும் மேலாகக் கதிராமன் இனி என்றும் தன்னுடனேயே இருப்பான், அவன் துணையொன்றே தனக்குப் போதும் என்ற எண்ணங்களே அவளுடைய உவகைக்கும் திருப்திக்கும் காரணங்களாய் இருந்தன.

 
21.

எளிமை நிறைந்த வாழ்விலே ஆசைகள் மிகக் குறைவு. மிகச் சிலவான அந்த ஆசைகளும் எளிமையாகவே இருப்பதனால் அவை இலகுவில் நிறைவேறி விடுகின்றன! அவை நிறைவேறிய ஆத்மதிருப்தியுடன் வாழும் எளிமையான மக்களின் மனங்களில் நிராசைகளோ, ஏமாற்றங்களோ நிரந்தரமாகத் தங்கியிருந்து சினம், பொறாமை, கவலை முதலியவற்றைப் பெரிய அளவிலே பிறப்பித்து அவர்களை அலைக்கழிப்பதில்லை.

தண்ணிமுறிப்பு காடாகக் கிடந்த காலத்தில் அங்குவந்து முதலில் குடியேறிய கோணாமலையர் தனக்கும், தன் குடும்பத்துக்கும் வேண்டியவற்றைத் தாமே விளைவித்துக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்திருந்தார். அப்போதெல்லாம் அவருக்கு அதிகமாக ஆசைப்படத் தெரியவில்லை. ஆனால் கதிராமனும் மணியனும் வளர்ந்து ஆளாகி அவருடைய வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டபோது, அவர் வீட்டில் மாடுகன்று பெருகியது. வயல்வரப்பு விளைந்தது. தேவைக்கு அதிகமாக இச் செல்வங்கள் பெருகியிருந்த காலத்திற்றான் குளம் திருத்தப்பட்டு, அதன் கீழ்க் கிடந்த காணிகள் கழனிகளாக மாறின. அதன் காரணமாக அயற்கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அங்கு தம் வயல்களுக்கு அடிக்கடி வந்துபோகத் தொடங்கினர். ஒரு கணிசமான தொகையினர் ஆங்காங்கு தங்கள் வயல்களை அண்டிய இடங்களில் குடியேறவும் செய்தனர்.

கதிராமன், பாலியார் இவர்களை இந்த மாற்றங்கள் அதிகம் பாதிக்கவில்லை. ஆனால் மலையரோ காலக்கிரமத்தில் குறிப்பிடக்கூடிய அளவுக்கு மாறிப் போயிருந்தார். உத்தியோக நிமித்தமாக அங்குவந்து குடியேறிய காடியரும், அடிக்கடி வந்துபோகும் மம்மதுக் காக்காவும் இந்த மாற்றத்திற்குப் பெரிதும் காரணமாயிருந்தார்கள். 'என்ன மலையர், நெடுக எருமையளை வைச்சுக்கொண்டு மாரடிக்கிறியள்? ஒரு உழவு மிசின் எடுத்தாலென்ன?" என்று அடிக்கடி காடியர் சொல்வதும், 'கதிராமனுக்கு உழவு மிசினோடை பொம்பிளை தரக் குமுளமுனைச் சிதம்பரியர் காத்திருக்கிறார்" என்று மம்மதுக் காக்கா கூறுவதையும் கேட்ட கோணாமலையர் மனதில், தன்னிடமும் ஒரு உழவு இயந்திரம் இருந்தால் இன்னும் அதிக அளவில் கமஞ் செய்யலாம், பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசைகள் தளிர் விட்டிருந்தன. அவை மெல்ல மெல்ல வளர்ந்து மனதின் அடித்தளம்வரை வேர்பரப்பி விசாலித்து நின்றன! அவரது ஆசை விருட்சத்தைக் கதிராமனின் செயல் புயலின் வேகத்துடன் உலுப்பிச் சரித்துவிடவே, இதுவரை அதிகம் வேதனைப்பட்டறியாத மலையர் வெகுண்டெழுந்தார். அவருக்கு ஏற்பட்ட அசாத்திய சினத்தில் எதையோவெல்லாம் செய்து தன்னுடைய ஆத்திரத்தைத் தீர்த்திருப்பார். ஆனால் உலக அனுபவமும், பேச்சுச் சாதுரியமும் மிக்க காடியரின் முயற்சியினாலேயே ஓரளவு அடங்கிப்போனார். கதிராமன் காடுவெட்டிக் குடிசை போடுகிறான் என்று அறிந்ததுமே மலையர் பொங்கி எழுந்தார். 'உவையள் இரண்டுபேரும் இஞ்சை தண்ணிமுறிப்பிலை இருக்க நான் விடுவனோ?" என்று சீறினார். யாருடைய நல்ல வேளையோ அச்சமயம் காடியரும் மலையரின் பக்கத்தில் இருந்ததால் அவரை ஒருவாறு சாந்தப்படுத்த முடிந்தது. 'இங்கை பாருங்கோ மலையர்! அவன் பொடியன் அவளை முடிச்சுக்கொண்டு போட்டான். இனி நீங்கள் அதுகளை அடிச்சுக் கொல்லுறன், வெட்டிப் புதைக்கிறன் எண்டெல்லாம் வெளிக்கிடுறது அவ்வளவு வடிவாய் இல்லைப் பாருங்கோ! இனி வருங்காலத்திலை உங்களுக்கு நல்ல செல்வாக்கு சீர் எல்லாம் வரப்போகுது. தண்ணிமுறிப்பு இப்ப சின்ன ஊர் இல்லை. இதைச் செம்மலைக் கிராமச் சங்கத்திலை ஒரு வட்டாரமாக்கிறதுக்கு சேமன் பொன்னம்பலம் வேலை செய்யிறாராம். அப்பிடி வந்திட்டுதே எண்டால் இங்கை நீங்கள்தான் போட்டியில்லாமல் மெம்பராய்ப் போவியள்! இப்ப கண்டபடி கிறிமினல் வேலையளிலை இறங்கினியளோ, அது உங்கடை வருங்காலத்துக்குக் கூடாது! அவன் போனவன் போகட்டுமெண்டு தலைமுழுகிப் போட்டு மற்ற விஷயங்களைக் கவனியுங்கோவன்!" என்று அடுக்கிக் கொண்டுபோன காடியர் தொடர்ந்து, 'ஏன் உங்கடை மணியனுக்கு இப்ப என்ன வயசு? இருவத்தொண்டு இருக்குமெல்லே? ஏன் மணியனுக்கு அந்தக் குமுளமுனைச் சம்பந்தத்தைச் செய்தால் என்ன?" என்று வினயமாகப் பேசி மலையரின் மனதை மாற்றிவிட்டார்.

புதியதொரு வழியில் காடியர் மலையரின் மனதைத் திருப்பவே, அத் திட்டத்தின் கவர்ச்சியில் எடுபட்டுப் போய்விட்டார் அவர். எனவே தற்போதைக்குக் கதிராமனையும், பதஞ்சலியையும் வெட்டிப் புதைக்கும் முயற்சியைக் கைவிட்டிருந்தார். இருப்பினும் அடிக்கடி கொதித்துக் குமுறத்தான் செய்தார். அந்தச் சமயங்களில் தன் கோபத்தையெல்லாம் பாலியரின்மேல் கொட்டித் தீர்த்துக்கொள்வது வழக்கமாயப் போயிற்று. ஓசையின்றி, ஒப்பாரியின்றி ஒரு சுமைதாங்கியைப் போல அவருடைய கோபத்தையும், தன்னுடைய கவலைகளையும் சுமந்துகொண்டே வாழ்ந்தாள் பாலியார்.

கதிராமன் புறப்பட்டுப்போன இந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே மலையரின் வளவு தன் களையையும், கலகலப்பையும் இழந்திருந்தது. இயல்பாகவே சற்று விளையாட்டுத்தனம் கொண்ட மணியன், கதிராமனுடைய துணையும் மேற்பார்வையும் இல்லாத காரணத்தினால் அசிரத்தையாக இருக்கத் தலைப்பட்டான். கடைக்குட்டி ராசுவிற்கோ இவ்வளவு நாட்களும் பதஞ்சலியைக் காணாதது சப்பென்றிருந்தது. அவனுடன் சண்டைபிடித்து விளயாடுவதற்கு யாருமேயில்லை. பாலியார் நிலையோ வேறு!

பகலெல்லாம் மௌனமாக நின்று பங்குனிமாத வெய்யிலில் வெந்து, இரவின் தனிமையில் நீர்சிந்தி இரங்கும் காட்டு மரங்களைப் போன்று பாலியாரும் பகல்முழுவதும் மனதுக்குள்ளேயே தன் மகனை எண்ணிப் புழுங்கி, இரவெல்லாம் கண்ணீர் நிறைந்த நினைவுகளுடன் காலத்தைக் கழித்து வந்தாள். சற்று வெளிப்படையாகத் தெரியும் வகையில் அவள் எப்போதாவது சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாற் போதும் எரிந்து விழுவார் மலையர். 'என்னடி விடியாத முகத்தோடை திரியிறாய் மூதேவி!" என்று சினப்பார். கவலைப்படுதற்குக்கூடச் சுதந்திரம் இல்லாதவளாக நெஞ்சுக்குள் பொருமிக் கொள்வாள் அவள்.


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 10 Feb 2025 14:03
TamilNet
The JVP has recently lent itself to US efforts to consolidate the unitary state and realise its long-held ambition to capture state power in Colombo. In this regard, they have also engaged with a range of actors, from the IMF, Washington, and New Delhi, as well as attempted to woo Eezham Tamils and other Tamil-speaking people to opt for the NPP in the 2024 SL Presidential Elections. Norway-based Eezham Tamil anthropology scholar Dr Athithan Jayapalan writes that the NPP and Lionel Bopage speak of equality without addressing the right of an oppressed nation to secession in the face of national oppression and genocide. Instead, the NPP, aligned with the US position, vows to neutralise the Eezham Tamil political struggle for self-determination.
Sri Lanka: JVP always denied Eezham Tamils?inalienable self-determination: Anthropology scholar


BBC: உலகச் செய்திகள்
Mon, 10 Feb 2025 14:06


புதினம்
Mon, 10 Feb 2025 13:25
















     இதுவரை:  26558562 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6174 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com