அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 25 January 2026

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow நிலக்கிளி arrow நிலக்கிளி அத்தியாயம் - 24-25
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிலக்கிளி அத்தியாயம் - 24-25   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Thursday, 23 June 2005

24.

மலையர் தான் பெற்ற மகனுக்கு வஞ்சனை செய்யதபோதும், அவனை வளர்த்த செவிலித் தாய் முல்லையன்னை அவனை வஞ்சிக்க மனமில்லாதவளாய், வெட்டுக் காட்டிலே மலையர் இட்ட நெருப்பை நன்றாகவே பற்றவைத்துக் கொண்டாள்.

இந்தச் சமயம் காற்றும் விழுந்துவிடவே, உலர்ந்து கிடந்த அந்தக் காட்டில் நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. தாவியெழுந்த செந்தீயின் நாக்குக்கள் காட்டை நக்கியெடுத்தன. சுள்ளிகள் சடசடவென வெடித்தன. உய்யென்ற இரைச்சலுடன் தீச்சுவாலை உயரே எழுந்தது. அந்தச் சுற்றுவட்டாரத்தையே ஒளிமயமாக்கிக் கொண்டு எரிந்த காடு புகை கக்கியது.

கதிராமன் புகைநெடியை உணர்ந்து விழித்தபோது, எங்கோ நெருப்புப் பிடித்துக்கொண்டது என்பதைப் புரிந்து கொண்டான். சரேலென்று எழுந்தவன், பதஞ்சலியை அப்படியே கையிரண்டிலும் வாரித் தூக்கிக்கொண்டு, குடிசைப் படலையை உதைத்துத் திறந்து வெளியே வந்தான். அவன் நினைத்ததுபோல் குடிசையில் நெருப்புப் பிடித்திருக்கவில்லை. அவன் வெட்டியிருந்த காடு, குடிசையிலிருந்து ஏறக்குறைய நூறு பாகத் தொலைவில் இருந்தபடியால் குடிசைக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட இடமிருக்கவில்லை.

இதற்குள் விழித்துக் கொண்ட பதஞ்சலி, 'என்ன காடு எரியுது?" என்று பதறிப்போய்க் கேட்டாள். 'ஆரோ காட்டுக்கு நெருப்பு வைச்சிட்டாங்கள் பதஞ்சலி!" என்று அமைதியாகக் கூறிய கதிராமன், மேலே வானத்தையும், சுற்றாடல் காடுகளையும் ஒருதடவை கூர்ந்து கவனித்தான். நெருப்பின் ஒளியில் அவனுடைய முகத்தில் ஒரு மந்தகாசமான புன்னகை பிறந்ததைப் பதஞ்சலி கண்டாள். 'ஆரோ வேணுமெண்டுதான் நெருப்பு வைச்சிருக்கினம் பதஞ்சலி! ஆனால் காட்டுக்கு நெருப்பு வைக்கிறதுக்கு இதைவிட நல்லநேரம் தேடினாலும் கிடையாது!... பார்!... காடு என்னமாதிரி எரியுதெண்டு! விடியுமுன்னம் முழுக்க எரிஞ்சுபோடும்!" என்று உற்சாகமாக விஷயத்தை விளக்கினான் அவன். பயம் அகன்ற பதஞ்சலி, எரியும் காட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றாள்.

கதிராமன் தங்கள் குடிசைக்கு வரும் ஒற்றையடிப் பாதையருகில் சென்று குனிந்து கவனமாகப் பார்த்தான். அந்தப் பாதையில் காணப்பட்ட காலடித்தடங்கள் தெளிவாகத் தெரிந்தன. அவற்றைப் பார்த்துவிட்டுப் புன்முறுவலுடன் வந்த கதிராமன், 'நான் நினைச்சதுபோலை அப்புதான் காட்டுக்கு நெருப்பு வைச்சிருக்கிறார். அதுதானே காடு இப்பிடி முளாசி எரியுது!" என்று சிரித்தான்.

முற்கோபக்காரர் மூட்டும் தீ உடனே பற்றி நன்றாக எரியும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. எனவே மலையரைவிட இந்த வேலையைச் செய்வதற்கு தகுதி வாய்ந்தவர்கள் இந்தப் பகுதியிலேயே கிடையாது. அதை எண்ணித்தான் கதிராமன் சிரித்துக் கொண்டான். அதன் காரணத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்ட பதஞ்சலியும் உடனே கலகலவெனச் சிரித்துவிட்டாலும், மறுகணம், மலையர் ஏன் காட்டுக்கு நெருப்பு வைக்கவேண்டும் என்பதை நினைத்துக் கலவரப்பட்டுப் போனாள். அதைக் கண்ட கதிராமன், 'எல்லாம் நன்மைக்குத்தான் நடக்குது! வா நாங்கள் படுப்பம்" என்று அவளை அணைத்துக் கொண்டான்.

மலையர் என்ன நினைத்துக் கொண்டு காட்டுக்குத் தீ வைத்தாரோ அதற்கு நேர்மாறாகக் காடு நன்றாகவே எரிந்திருந்தது. அடுத்த நாள் மாலையில் திடீரென வானம் இருண்டு நல்லதொரு மழையும் பெய்யவே கதிராமன்பாடு கொண்டாட்டமாய் விட்டது. ஏனெனில எரிந்த காட்டின் மண்ணின் கீழ்க் கிடக்கும் வேர்கள் நன்றாக வெந்த நிலையில் இருக்கையில், மழைபெய்து அவை திடீரெனக் குளிர்ந்தால், அந்த வேர்களிலிருந்து மீண்டும் தளிர்கள் கிளம்பாது. இது கதிராமனுக்கு எவ்வளவோ நன்மையாக இருந்தது. அவன் மறுநாளே பில வெளியாக்குவதில் முழுமூச்சுடன் ஈடுபட்டான்.

 
25.

கதிராமனுக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தையிட்டுப் பொறமைப் படுவதற்குக்கூட நேரமின்றிக் கோணாமலையர் உழவு இயந்திரம் வாங்குவதற்காகத் தீவிர முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார். நல்லதொரு நாளிலே முல்லைத்தீவுக்குச் சென்று, அங்கு வாழும் செல்வந்தரான சின்னத்தம்பியரிடம், தன்னுடைய வயலை ஈடாக வைத்து மூவாயிரம் ருபாவைப் பெற்றுக் கொண்டார்.

தண்ணீருற்றில் இருக்கும் மெக்கானிக் நாகராசாவுடன் கலந்து ஆலோசித்ததில் உருப்படியாக ஒரு உழவு இயந்திரமும், கலப்பையும் வாங்குவதற்கு இன்னமும் மூவாயிரம் ருபாய் வேண்டியிருந்தது. எனவே கையோடு நீராவிப்பிட்டி இப்றாகீமைக் கூட்டிக் கொண்டுவந்து தன் எருமை, பசு மாடுகளில் முக்கால் பங்கை விற்று இரண்டாயிரம் ருபாவைப் பெற்றுக் கொண்டார். ஏற்கெனவே கைவசம் வைத்திருந்த ஆயிரம் ருபாவுடன் இப்போ மொத்தமாக ஆறாயிரம் ருபா தேறியது. அதை எடுத்துக் கொண்டு மெக்கானிக் நாகராசாவின் உதவியோடு, முள்ளியவளையிலுள்ள ஒருவரிடம் ஆறாயிரம் ருபாவுக்கு உழவு இயந்திரமும், கலப்பையும் வாங்கிக் கொண்டார் மலையர். அவர் வாங்கிய உழவு இயந்திரம் சற்றுப் பழையதாக இருந்தாலும், அதைப் பார்க்குந்தோறும் கோணாமலையருக்குப் பெருமை பொங்கி வழிந்தது. நாகராசா ஒரு றைவரையும் மலையருடன் கூட அனுப்பி வைத்தான். அவருடைய அறியாமையையும், ஆசையையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மெக்கானிக் நாகராசாவுக்கு இந்த பிசினசில் ஒரு கணிசமான தரகுத்தொகை கிடைத்திருந்தது.

தண்ணமுறிப்பை நோக்கிக் கடபுடாச் சத்தங்களுடன் சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரத்தின் மட்காட்டைப் பிடித்துக்கொண்டு பெரும் பிரயத்தனத்துடன் பயணம் செய்துகொண்டிருந்தார் மலையர். றைவர் அடிக்கடி பீடி புகைத்துக் கொண்டும், அலட்சியமாக உழவு இயந்திரத்தைச் செலுத்திக்கொண்டு சென்றதும் அவருக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. 'மிசின் றைவர்மார் எல்லாரும் இப்பிடித்தானாக்கும்.... கெதியிலை மணியனை மிசின் ஓடப் பழகிக்கிப் போட்டால் பிறகேன் இவனை..." என்று தனக்குள் திட்டம் போட்டுக்கொண்டார்.

குமுளமுனையை நெருங்கியதும், மணியனுக்குப் பெண்தர மறுத்த சிதம்பரியர் வீட்டுக்கு முன்னால் வேண்டுமென்றே உழவுயந்திரத்தைச் செலுத்தச் செய்து அபாரத் திருப்திப்பட்டுக் கொண்டார் மலையர்.

உழவுயந்திரம் கதிராமனுடைய குடிசையிருந்த இடத்தைக் கடந்து செல்கையில், மலையர் அந்தப்பக்கம் திரும்பி ஒரு பெருமிதப் பார்வையைப் படரவிட்டார். தனது ஆசை நிறைவேறிய களிப்பில், கதிராமன்மேல் அவருக்கிருந்த கோபங்கூடச் சற்றுக் குறைந்து விட்டதுபோல் தோன்றியது.

வண்டில் விடுவதற்கெனப் போடப்பட்டிருந்த கொட்டகையினுள் உழவுயந்திரம் பக்குவமாக நிறுத்தப்பட்ட பின்னர்தான் மலையருக்கு நிம்மதி ஏற்பட்டது.

கோணாமலையர் உழவுயந்திரம் வாங்குவதற்கு எடுக்கும் முயற்சிகள் பற்றிக் கதிராமன் அறிந்திருந்தான். அதையிட்டு அவன் அதிகம் பொருட்படுத்தாவிடினும், தானும் மணியனும் எவ்வளவோ கஷ்டப்பட்டுப் பெருக்கிய கறவையினத்தை, மலையர் மிசின் வாங்குவதற்காக இறைச்சிக்கு விற்றுவிட்டார் என்பதை அறிந்தபோது ஒருகணம் அவனுடைய மனம் மிகவும் வருந்தியது. ஆனால் அடுத்த நிமிடம், உழவுயந்திரம் வாங்கியதன் மூலம், தன் பெற்றோர்களின் வாழ்க்கை சிறப்புற்றால் அதுவும் நல்லதுதானே என எண்ணிக்கொண்டு தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தினான் கதிராமன்.


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sun, 25 Jan 2026 13:44
TamilNet
The present moment in Tamil politics demands far more than tactical adjustment or rhetorical caution. It demands a fundamental reassessment of the assumptions that have gradually come to govern political engagement since the end of the genocidal war in 2009. What is at stake today is not merely the content of constitutional proposals, but whether the Tamil political project itself is being quietly stripped of its historical, legal, and moral foundations. This erosion has not occurred overnight. It has unfolded through a slow narrowing of political imagination, in which positions once regarded as foundational have been recast as impractical, excessive, or even dangerous.
Sri Lanka: ITAK, DTNA and TNPF: Need for recalibration without capitulation


BBC: உலகச் செய்திகள்
Sun, 25 Jan 2026 13:03


புதினம்
Sun, 25 Jan 2026 13:03
















     இதுவரை:  28149333 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3890 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com