அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 24 April 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow வட்டம்பூ arrow வட்டம்பூ - 15
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வட்டம்பூ - 15   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Sunday, 09 July 2006

15.

அடுத்தநாட் காலையில் சிங்கராயர் மிகவும் உற்சாகத்துடன் தோளில் புதிய வார்க்கயிற்றுடன் அடர்ந்த காட்டினூடாகப் பழையாண்டங்குளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். கூடவே சேனாதி கையில் துவக்குடன் பின்தொடர, குணசேகராவும் அவனுடைய ஆட்களும், புல்லுக்குத் தீ வைப்பதற்காக கட்டிய தென்னோலைச் சூள்களை கொண்டு சென்றனர். அன்று வேட்டை நாய்கள் வேண்டாம் எனச் சிங்கராயர் அவற்றைக் கூட்டிச் செல்லவில்லை.

பழையாண்டங்குளத்தை அடைந்து, அதன் கட்டில் ஏறிநின்று பார்க்கையில் பகல் பன்னிரண்டு மணியாகி விட்டிருந்தது. வெய்யில் கொளுத்திக் கொண்டிருந்தது. வைக்கோலாய்க் காய்ந்து கிடக்கும் புற்காட்டையும், அதன் அகன்ற பரப்பின் நடுவே சற்றுப் பச்சனவாகக் காணப்பட்ட நீர் மோட்டையையும், தீர்க்கமாகக் கவனித்த சிங்கராயர், விடுவிடென ஒரு உயர்ந்த மரத்தில் ஏறி, மோட்டையை அவதானித்தார். கலைவு ஏதுமின்றி அங்கே கலட்டியன் தண்ணீரில் படுத்துக் கிடந்தது. திருப்திப் புன்னகையுடன் கீழே இறங்கி வந்தவர், காற்று விழுந்து வெம்மை அனல்விட்ட அந்தச் சமயமே தீ மூட்டுவதற்குச் சிறந்த நேரம் எனக் கணித்துக்கொண்டு, குணசேகராவையும் அவன் சகாக்களையும் அழைத்து, தணிந்த குரலில், செய்யவேண்டிய பணியை அவர்களுக்கு விளக்கினார்.

அவர்கள், தமது கையில் வைத்திருந்த தென்னோலைச் சூள்களுடன் குளத்தை வளைத்துச் சென்று, சிங்கராயர் குறிப்பிட்ட இடங்களில் நின்றுகொண்டனர். காற்று வீசாதபடியினாலும், உயர்ந்த புற்களின் நடுவே கலட்டியன் நீரில் கிடந்ததாலும், அது வரும் ஆபத்தை அறியாதிருந்தது. சிங்கராயர் தான் ஏற்கெனவே குறித்து வைத்திருந்த முதிரை மரத்தில் ஏறி, தனது புதிய வார்க்கயிற்றை அந்த மரத்தின் பருமானான கிளையொன்றில் சிக்கராகக் கட்டிவிட்டு, சைகையைக் காட்டினார். குணசேகராவும் அவனது ஆட்களும் ஒரே சமயத்தில் பற்றவைத்த நெருப்பு கிசுகிசுவென, கலட்டியன் கிடந்த மோட்டையைச் சுறு;றிப் பரவிக் கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் கொழுந்துவிட்டு எழுந்த தீ, மோட்டையை அண்மிக்க முன்னரே நெருப்பின் நெடியை உணர்ந்துகொண்ட கலட்டியன் வெகுண்டெழுந்து நாலாபக்கமும் ஓடி, தலையை உயர்த்தி சுவடித்தது.

இதற்குள் மளமளவென ஆளுயுரத்திற்குப் பரவிய தீ மோட்டையடிக்கும் வந்துவிடவே, திகிலடைந்த கலட்டியன், சிங்கராயர் கணித்தபடியே மணற்படுக்கையாகக் கிடந்த ஆற்றுப்பவரில் வேகமாக ஓடியது. அதன் பின்னங்கால்களில் ஒன்று நொண்டுவதை அவதானித்துக் கொண்டே, மரத்தின்கீழ் கலட்டியன் வந்ததும் வீசுவதற்கு சித்தமாகச் சிங்கராயர் உஷார் நிலையில் இருந்தார்.

இதோ அவர் இருந்த மரத்திலிருந்து சுமார் பத்து யார் தொலைவில் வந்துவிட்ட கலட்டியனுக்கு மரத்திலிருந்த சிங்கராயரின் வாடை விழுந்திருக்க வேண்டும். அது தன் பாதையில் சட்டெனத் தன் முன்னங்கால்களை ஊன்றி வேகத்தைக் கட்டுப்படுத்தித் தலையை உயர்த்தி, விழிவெள்ளை புரள சிங்கராயரைப் பார்த்தது. மறுகணம் கலட்டியன் சிங்கராயர் கற்பனை செய்யாதிருந்த ஒன்றைச் செய்தது.

அவர் தனது உயரத்துக்கு, அகலமாக, மரங்களை தறித்து தானிருந்த முதிரை மரத்தின் இருபக்கங்களிலும் அரண்போல அமைத்திருந்தார். கலட்டியனை மரத்தின் கீழாக வரச்செய்வதற்கு அவர் அந்த வெட்டுவேலியை அமைத்திருந்தார்.  நன்றாகக் காய்ந்துகிடந்த அந்த அரண்போன்ற அமைப்பும் இப்போது தீப்பிடித்துத் திமுதிமுவென எரிந்து கொண்டிருந்தது. சிங்கராயர் வியப்பு மேலிட்டவராய்ப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கலட்டியன் தனது அசுரப் பலத்தைப் பிரயோகித்து, எரியும் அரணை மோதிப் பிளந்துகொண்டு கண்ணிமைக்கும் பொழுதினில் காட்டினில் பாய்ந்தது. அதன் உடலில் இருந்த முரட்டு உரோமம் தீயில் பற்றிப் பொசுங்கி மணத்தது.

'சே! தப்பீட்டுது!" என உறுமிய சிங்கராயர் மரத்தால் இறங்கி, யாவரையும் அழைத்துக்கொண்டு ஊருக்குத் திரும்பினார். கலட்டியன் தீக் காயங்களுடன் பழையாண்டங்குளத்துக்கு மேற்கே காடுகலங்க ஓடிக்கொண்டிருந்தது.
சிங்கராயரின் முகத்தைப் பார்த்ததுமே செல்லம்மா ஆச்சிக்கு விஷயம் புரிந்துவிட்டது. இந்த நேரம் அவரிடம் எதாவது கேட்டால் கொதித்துச் சீறுவார். எனவே ஒரு செம்பு நிறைய சில்லென்ற மோரை எடுத்துச்சென்று அவரிடம் கொடுத்தபோது, அதை வாங்கி மடக்கு மடக்கென பருகிமுடித்த சிங்கராயர் சற்றுக் கொதிப்பு அடங்கியவராய், 'மனுசி!.. இண்டைக்கும் கலட்டியன் தப்பீட்டுது! எப்பிடியும் அடுத்த விதைப்புக்கு முன்னம் அதை நான் புடிச்சுப்போடுவன்!.. இனி நாயளைக் கொண்டுபோய் கலட்டியனிலை ஏவிவிட்டுத்தான் புடிக்கப்போறன!" என உரத்துச் சொன்னார். அப்படியான முயற்சியில் உள்ள பேராபத்தை அறிந்த செல்லம்மா ஆச்சி உடனே வெளியே எதுவும் கூறாவிடினும், தன் மனதுக்குள் ஆதி ஐயனே! என வேண்டிக்கொண்டாள்.

சேனா தண்ணீரூற்றுக்குப் புறப்படுகையில் மான்குட்டி மணியுடன் பனைகளினூடாக ஓடிவந்த நந்தாவதி, தன்னால் இப்போது பாலையடி இறக்கம்வரை வந்து வழியனுப்ப முடியாததையிட்டுக் கூறிவிட்டு, குடிசையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த தந்தையிடம் ஓடிவிட்டாள்.

சேனாதிக்கும் அன்று அவர்கள் கலட்டியனைப் பிடிக்க முயாமற்போனது பெரும் ஏமாற்றமாக இருந்தது. அடுத்த சனிவரை நந்தாவைக் காணமுடியாது என்ற எண்ணமும் அவனை உள்ளுக்குள் வருத்தியது. இத்தகைய மனநிலையில் உற்சாகம் குன்றியவனாய் குமுளமுனைக்கு வந்து, பஸ்சேறி தண்ணீரூற்றை வந்தடைந்தான்.


மேலும் சில...
வாசகர்களுடன்..
வட்டம்பூ-01
வட்டம்பூ - 02
வட்டம்பூ - 03
வட்டம்பூ - 04
வட்டம்பூ - 05
வட்டம்பூ - 06
வட்டம்பூ -7-8
வட்டம்பூ - 09
வட்டம்பூ - 10
வட்டம்பூ - 11
வட்டம்பூ - 12
வட்டம்பூ - 13
வட்டம்பூ - 14
வட்டம்பூ - 16
வட்டம்பூ - 17
வட்டம்பூ - 18
வட்டம்பூ - 19
வட்டம்பூ - 20 - 21 -
நிலக்கிளி - வட்டம்பூ நாவல்களும் நானும் - 01
நிலக்கிளி, வட்டம்பூ நாவல்களும், நானும் - 02
நிலக்கிளி,வட்டம்பூ நாவல்களும், நானும் - 03

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 24 Apr 2024 03:43
TamilNet
HASH(0x56252104e038)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Wed, 24 Apr 2024 03:43


புதினம்
Wed, 24 Apr 2024 03:43
















     இதுவரை:  24798800 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3116 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com