அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 17 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 30 arrow இலக்கிய படப்பிடிப்பு காட்சி - 01
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


இலக்கிய படப்பிடிப்பு காட்சி - 01   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….குமரன்  
Tuesday, 13 February 2007

பழந்தமிழ் இலக்கியம் என்று கேட்டதுமே இது படித்தவர்களுக்கே  புரியக்கூடிய விடயமென்று முடிவுகட்டி அதை மூடிவிட்டு வேறு  சாதாரண விஷயங்களைப் பார்க்கலாம் எனற ஒருபோக்கு  பரவலாகவே பலருக்கும் ஏற்படுகின்றது.
உண்மை அதுவல்ல. இலக்கியத்தை இயல்பாக எல்லோருக்கும்  ரசிக்கும்படி எடுத்துச் சொல்லாமல் பள்ளிக்கூடங்களில் பாடம்  நடத்துவது போலவே சொல்லிக்கொண்டிருப்பதால் வந்த  அபிப்பிராயமே இதுவாகும்.
உண்மையான இலக்கியம் ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து ரசித்து அநுபவிக்கும்படி அமைந்திருக்கின்றது. இதை சும்மா சொல்லிக்  கொண்டிருப்பதைவிட செய்துகாட்டினால் அதாவது எல்லாருக்கும்  ஏற்புடையதாக எழுதிக்காட்டினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்  என்ற நோக்கில் எழுந்ததே இந்த தொடர். இந்த எளிமை  இலக்கியத்தின் இனிமைக்கும் இயல்புக்கும் எந்தக் குறையும்  செய்யாமல் அனைவருக்கும் அதனை தெரிந்துகொள்ளும், ரசிக்க  வைக்கும் ஆர்வத்தை அதிகமாக்கும் என்றே நம்புகிறேன்.

காட்சி - 01

கண்ணோடு கண்கலந்து இதயங்கள் இடம்மாறிப் புகுந்து உயிர்கள்  ஒன்றிப்போன காதல். வழமைபோல் இருபக்கத்தும் எதிர்ப்பு.  இருந்தாலும் உறுதியோடு அதை எதிகொண்டு தமக்கென  தனிவாழ்க்கை அமைத்துக் கொள்கிறார்கள் தலைவனும்  தலைவியும். புதுமணத் தம்பதிகளாய் இல்லறத்தில் நுழைகிறார்கள்.  தலைவனுக்காக தானே சமைத்து பரிமாறுகிறாள் தலைவி.  பசிதாங்கமாட்டானே என்ற பரிந்துணர்வால் விரைவாக  சமைக்கிறாள். புதிய அநுபவம். சமைப்பதில் அவளுக்கு இருக்கிற  அனுபவக் குறைவு அல்லாடவைக்கிறது. போதாதற்கு அடுப்ப வேறு சரியாக எரியாமல் புகை கக்குகிறது. பட்டுச் சேலையில் கைகளை  துடைத்துக்கொண்டு கண்களில் புகைபடிய அவள் சமைக்கும்  அழகில் இது புதுப்பழக்கம் என்பது தெளிவாகவே தெரிகின்றது.

உப்பு, புளி அளவு, உணவுக்கு சுவைசேர்க்கும் இந்த அடிப்படை,  அளவாக இவைகளை சேர்த்துக் கூட்டும் பக்குவம், எல்லாமே  புதியது. இருந்தும் என்னவனுக்கு நானே சமைத்து பசியாற  பரிமாறப் போகிறேன் என்ற உணர்வு அவளை உந்தித் தள்ளி  இயங்க வைக்கின்றது. அப்பாடா ஒருபடியாய் சமைத்து  முடித்தாயிற்று. புறங்கையால் வியர்வையைத் துடைத்து கையை  சேலையால் ஒற்றித் துடைத்து தன்னை இயல்பாக  இருப்பவள்போல் தயார்படுத்திக்கொண்டு தலைவனை  அழைக்கிறாள். தலைவாழையிலை போட்டு அன்னம் தயாராக  இருக்கின்றது உண்ண வாருங்கள் உணவின் சுவை கூறுங்கள்  என்கிறாள். தலைவன் வந்து அமர்கின்றான்.

இத்தனை நேரமும் அவள்பட்டபாட்டையும் தனக்காக அவைகளை  தாங்கிக் கொண்டு செயற்பட்டதும் இப்போது இன்முகத்துடன்  உண்ணுங்கள் என்று உபசரிப்பதையும் உள்வாங்கிக் கொண்டு  உண்கிறான். அவன் முகம் மலர்ந்து பிரகாசிக்கின்றது. ஆகா இனிது இனிது என்று அள்ளி அள்ளி உண்கிறான். அதைப்பார்த்த அவள்  தன்களைப்பையும், புகைபடிந்த கண் எரிச்சலையும்,  எப்படியிருக்குமோ என்ற ஏக்கத்தையும் மறந்து மனங்குளிர்ந்து  முகம் மலர்கிறாள்.

இத்தனைக்கும் பரிமாறப்பட்டது அறுசுவை உணவல்ல. வெறும்  புளிச்சாதம். ஆக்கியவள் சுவையரசியல்ல. அன்றைக்குத்தான்  பதிதாக சமைத்தவள். அந்தவகையில் உணவில் குற்றங்குறைகள்  ஏற்பட நிறைய வாய்ப்புகளுண்டு. இவையனைத்தும் இருந்தும்  இனிய உணர்வில் ஒன்றுபட்ட இரண்டு இதயங்கள் ஒன்றுக்கொன்று புரிந்துகொண்ட பக்குவத்தால் மற்றவரை காயப்படுத்தாமல்  மகிழ்விக்கின்ற அந்தப்பண்பு நலம் எண்ணி எண்ணி  வியக்கக்கூடியதல்லவா? இதுதான் இருமனங்கனிந்த இயல்பாக  இருக்க வேண்டுமென எண்ணத் தோன்றுகிறதல்லவா?   எல்லாவற்றிற்கும் மேலான முத்தாய்ப்பு இனித்தான் வருகின்றது.  என்னதான் எதிர்ப்பானாலும் தாய்மனது ஒரு தனி  நெகிழ்வானதுதானே. ஆக எனது மகள் எப்படி இருக்கிறாளோ  அவளை ஏற்றவன் எப்படி நடத்துகிறானோ என நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்துபோன அவள் தாய் வந்து இந்தக் காட்சியை கண்டு  வியந்த மகிழ்கிறாள். வியப்பு அடே! இவளுக்கும் சமைக்த்  தெரிகிறதே ஒன்றுந்தெரியாத பேதை என்றல்லவா  எண்ணியிருந்தேன் என்பது. மகிழ்வு எவ்வளவு அன்பிருந்தால்  அந்தக் கொண்டவன் இவள் சமைத்ததை இனிது இனிது என  உண்பான் என்பதால். ஒரு இனிய இல்லற மாட்சி அந்தத் தாயின்  கண்களில் தெரிகின்றது.

இது ஏதோ திரைப்படத்தில் இடம்பெற்றதாக்கும் என்று  நினைத்துவிடாதீர்கள். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் நமது தமிழ் இலக்கியம் காட்டிய காட்சியிது. சங்க இலக்கியமான  குறுந்தொகையின் 167வது பாடல் (முல்லை - செவிலித்தாய்  கூற்று) இந்தக் காட்சியை படம்பிடிக்கின்றது.
'முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே'
-கூடலூர் கிழார்
பாடல் எளிதில் புரிகின்றதல்லவா? குறுந்தொகை இக்காட்சியை  படம் பிடித்திருக்கின்றது என்று சொன்னேனே இது அன்றைய  காட்சியின் படப்பிடிப்பு மட்டுமல்ல. இத்தனை வருடங்களின்  பின்னால் இன்றும் நமக்கு தேவைப்படும் இருமனங்கலந்த  இல்லறம் பற்றிய பாடமாகவும் ஆகிறதல்லவா?

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)

 


மேலும் சில...
இலக்கிய படப்பிடிப்பு காட்சி - 02

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 17 Apr 2024 00:40
TamilNet
HASH(0x55fb584ece20)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 16 Apr 2024 23:45


புதினம்
Tue, 16 Apr 2024 23:45
















     இதுவரை:  24773358 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2284 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com