அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 17 June 2026

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow வட்டம்பூ arrow வட்டம்பூ - 03
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
தொடர்பு
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வட்டம்பூ - 03   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Saturday, 28 January 2006

03.

ஆண்டாங்குளத்துக்கு மேலே ஏழெட்டு மைல் தூரத்தில் கிடந்த புராதனக் குளமாகிய நித்தகையைப் புனருத்தாரணம் செய்யும் திட்டங்களுக்கு முன்னோடியாக, மூன்று வருடங்களுக்கு முன்னர் நில அளவைப் பகுதியின் சிறு குழுவொன்று ஆண்டாங்குளத்துக்கு வந்து முகாமிட்டிருந்தது.

அனைவரும் சிங்களவராக இருந்த அந்தக் குழுவுக்குத் தலைமைக் கங்காணியாக இருந்தான் குணசேகரா. அவன் அங்கு வந்து சில மாதங்களுள் கண்டியில் அவனது மனைவி, இரண்டாவது பிரசவத்தின்போது இறந்துவிடவே, அவன் தன் மகள் நந்தாவதியை ஆண்டாங்குளத்துக்கே அழைத்துக்கொண்டு வந்திருந்தான். அப்போது பதின்மூன்று வயதாக இருந்த நந்தாவதி தகப்பனுக்கு வேண்டிய வேலைகளைக் கவனித்துவிட்டு, சிங்கராயரின் வீட்டுக்கே வந்துவிடுவாள்.

அவருடைய மனைவி செல்லம்மாவுக்கு நந்தாவதி என்றால் அபாரப் பிரியம். வயோதிபத்தின் வாசலுக்கு வந்துவிட்ட அவளுக்கு, தன் மகள் கூடவே இல்லாத குறையை நந்தாவதியின் வரவு போக்கியது. சனிஞாயிறில் சேனாதிராஜன் ஆண்டாங்குளத்துக்கு வரும்போதெல்லாம் நந்தாவதியும் அவனுடன் கூடவே மாடு சாய்க்கவும், காட்டில் கரம்பைப்பழம பிடுங்கவும் செல்வாள். அப்போதுதான் தமிழைப் பேசப் பிரயத்தனம் செய்துகொண்டிருந்த நந்தாவதி, அடிக்கடி சேனாதிராஜனின் பரிகாசத்துக்கும், கேலிக்கும் இலக்காவது வழக்கம். அவளோ அதைப் பொருட்படுத்தாமல் சிரித்துக்கொண்டே சேனா! சேனா! என்று அவனையே சுற்றிவருவாள்.

'அங்கை பாத்தியே தம்பி அந்தக் கரையை!" எனக் கயிலாயரின் குரல் சேனாதிராஜனைச் சிந்தனையிலிருந்து விடுவிக்க, அவன் திரும்பி அவர் காட்டிய திசையில் கவனித்தான்.

ஆற்றின் வடக்கே ஒரு புல்மேட்டில் வெகுசுகமாக வெய்யில் காய்ந்துகொண்டு கிடந்தது ஒரு பெரிய முதலை. அத்தனை பெரிய முதலையை சேனாதிராஜன் இதுவரை கண்டதில்லை.

'உது செம்மூக்கன் முதலை சோனாதி! முதலையளுக்கை மகாகெட்டது இந்தச் செம்மூக்கன்தான்! .. உதுகளுக்கு மூக்கிலை கோவமாம்! .. ஆனால் உவற்றை வேலையொண்டும் இஞ்சை சரிவராது!.. .. ஆட்டைக் கடிப்பார்.. .. மாட்டைக் கடிப்பார்.. .. ஆனால் ஆளைக் கடிக்கமாட்டார்! .. .. ஆண்டாங்குளத்து ஐயன் சும்மா லேசுப்பட்டதே என்ன!" எனக் கயிலாயர் கூறிக்கொண்டார்.

அவர் கூறியதிலும் உண்மை இருக்கவே செய்தது. அந்தக் காட்டுக் கிராமமாகிய ஆண்டாங்குளத்தின் ஐயன் அந்த வட்டாரமெங்கும் பிரசித்திபெற்ற காட்டுத்தெய்வம். அக்கம்பக்கத்து ஊர்களில் களவுபோனால் சந்தேகநபரை ஆண்டாங்குளத்துக்கு அழைத்துவந்து, ஐயன் சந்நிதியில் எரியும் கற்பூரத்தை அணைத்து,  'நான் களவாடவில்லை!" என்று சத்தியம் செய்யச் சொல்வார்கள்.

ஒருமுறை, தங்கச் சங்கிலியொன்றைத் திருடிய ஒருவன், இங்கே வந்து தான் திருடவில்லை என்று கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்திருக்கின்றான். முதற் தடவையிலேயே, எரிகின்ற கற்பூரம் அணையாமற் போனதில் நாகாத்தைப் பூசாரிக்குச் சந்தேகம். 'மோனை!.. .. நீ சங்கிலியை எடுத்தா அதைக் குடுத்திடு!.. வழக்குக் கணக்கில்லாமல் நான் பாத்துக்கொள்ளுறன்!.. பொய்ச் சத்தியம் மட்டும் செய்யாதை!" என்று எச்சரித்திருக்கின்றாள். அவன் அதற்கும் மசியாமல் கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்திருக்கின்றான். அன்று மாலை அவன் ஆண்டாங்குளத்தை விட்டுச் செல்வதற்கிடையிலேயே, நாகந்தீண்டி மரணமான சங்கதியை அவனுடைய பாட்டி செல்லம்மா அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கின்றான் சேனாதி.

இறுதி நதியான தண்ணிமுறிப்பு ஆற்றின் இறங்குதுறையான பாலையடி இறக்கம் இப்போ கண்ணில் தென்பட்டது. அந்த இடம் ஆண்டாங்குளத்திலேயே சேனாதிக்கு மிகவும் பிடித்தமான இடமாகும். கரையை வளைத்தோடும் காட்டாறு ஆண்டுதோறும் பெருக்கின்போது குவிக்கும் மணல்மேட்டில் ஒரு ஒற்றைப் பாலைமரம் நின்றது. அந்த வெண்மணல் திட்டின் ஓரங்களில் மண்டிக் கிடக்கும் வட்டம்பூச்செடிகளில் எப்போதுமே பூக்கள் இரத்தச் சிவப்பாய்ச் சில்லென்று பூத்து நிற்கும்.

கரையை அண்மித்ததுமே துள்ளிக் குதித்து இறங்கிக்கொண்ட சேனாதி, பன்பையை எடுத்துக்கொண்டு உற்சாகமாக நடந்தான். வெள்ளை மணலாய் நீண்ட வண்டில் பாதையின் இரு ஓரங்களிலும், குட்டையான பொன்னாவரசம் செடிகள் பொன்னிறப் பூக்களைச் சுமந்து நின்றன. அருகே பரந்துகிடந்த பச்சைப் புல்வெளியில் ஆங்காங்கே வாகை மரங்கள் ரோஜா வண்ணப் பூக்களைப் புஷ்பித்து நின்றன. இவற்றின் அழகை மாந்தி நடந்த சேனாதி, திடீரென மிக அருகில், அடர்த்தியான ஒரு பொன்னாவரசுஞ் செடிக்குப் பின்னாலிருந்து 'ம்பா!" என்ற ஒலி கேட்டபோது விக்கித்துப் போனான். அவன் தன்னைச் சுதாரித்துக் கொள்வதற்குள், பூத்துக் குலுங்கிய அந்தச் செடிக்குப் பின்னாலிருந்து கலகலவெனச் சிரித்துக்கொண்டே நந்;தாவதி எழுந்தபோது சேனாதி, பயப்படுத்தி விட்டாளே என்ற அவமானமும், நந்தாவா இது என்ற வியப்பும் கலந்த ஒரு உணர்வுடன் அவளைப் பார்த்தான்.

'ஆ!.. பயங் .. பயம்.. நல்லாப் பயந்திடடீங்க! .. இல்லையா சேனா!" என மீண்டும் சிரித்தாள் நந்தா.

இயல்பாகவே சிவந்த முகத்தையுடைய நந்தாவதி சிரித்தபோது அவளுடைய கன்னங்களில் செம்மை படர்ந்தது. அவளுடைய அகன்ற கருநாவற் கண்கள் காலைக் கதிர்களின் ஒளியை வாங்கி இறைத்தன. முருக்கம்பூ இதழ்களுக்கு இடையே முத்துக்கள் மின்னின.

இதற்குள் சுயநிலைக்குத் திரும்பி விட்டிருந்த சேனாதி, 'நந்தா! என்னட்டைக் குட்டு வாங்கினதெல்லாம் மறந்து போச்சுது போலை!.. இண்டைக்கு முதல் நாள் எண்டபடியால் சும்மாவிடுறன்!.." எனச் சிரித்தவனாய்த் தொடர்ந்து, 'அதுசரி.. என்ன இப்ப நந்தாவுக்கு தமிழ் கொஞ்சம் நல்லாய் வருது?" எனக் கேட்டான்.

சேர்த்திருந்த விறகுக் கட்டைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு அவனுடன் நடந்த நந்தாவதி, 'அப்படியா!..ஸ்துதி!.. மிச்சங் நன்றி சேனா!.. கண்டியிலை நம்ம மாமி வூட்டுக்குப் பக்கத்திலை இருக்கிறது ஒரு இந்தியா அக்காதானே!.. அவங்களோடை நான் தினம் பேசிப் பழகினது!" எனப் பெருமையுடன் கூறிக்கொண்டாள்.

அவர்களிருவரும் சேர்ந்து நடந்து வந்த பாதை கிராமத்தருகில் கிளைவிட்டுப் பனைகளுக்கூடாகப் பிரிந்தபோது, 'நா அப்புறமா வர்றேன் சேனா!" என விடை பெற்றுக்கொண்டாள் நந்தா.

சேனாதிராஜன் பனகளினூடாக நடந்து சென்று எருமைகள் அடைக்கும் பட்டியை அடைந்தபோது, அவன் பிரியமாக வளர்க்கும் மான்குட்டி அவனைக் கண்டு, அதன் கழுத்தில் கட்டியிருந்த சிறிய மணி சப்திக்க அவனிடம் துள்ளிக்கொண்டு வந்தது. அதனைத் தடவிக் கொஞ்சிவிட்டுப் பட்டியினுள் பிரவேசித்தபோது, இளங்கன்றுடன் நின்ற தம்பிராட்டி எருமை சற்று வெருண்டது. 'ஓ..ஹோ!.." என ஒரு குறிப்பிட்ட ஓசை லயத்தில் அவன் குரல் எழுப்பியபோது அது அவனை இனங்கண்டுகொண்டு மீண்டும் தன் சொரசொரத்த நாவினால் கன்றை நக்கிக் கொடுக்க ஆரம்பித்தது.

மாதாளை எருமையில் கோவணத்துடன் பால் கறந்துகொண்டிருந்த சிங்கராயர் பேரனின் வரவுகண்டு மனைவியை அழைத்தார்.

'மனுசி! மனுசி!.. தம்பி வந்திட்டான்.. பாலைக் கொண்டுவந்து குடு!" என்று குரல் கொடுத்தார்.

சிங்கராயர் சாதாரணமாகப் பேசினாலே அதிரும். அவருடைய அந்தத் தொனியே அவருக்கு ஒரு தனிக் கம்பீரத்தைக் கொடுத்தது. சுண்டக் காய்ச்சிய பசும்பாலை, புளிபோட்டுத் துலக்கிய வெண்கல மூக்குப்பேணியில் கொண்டுவந்து பேரனிடம் கொடுத்துவிட்டு அவன் கையிலிருந்த பன்பையை வாங்கிக்கொண்டு, சேனாதியைப் பெருமையுடனும், வாஞ்சையுடனும் பார்த்தாள் செல்லம்மா ஆச்சி.

சிங்கராயர் கன்னங்கரேலென்று கருங்காலி மரம் போன்றிருந்தால், அவருடைய மனைவி அக்கினிக் கொழுந்து போலிருந்தாள். முதுமையினால் தேகம் சற்றுத் தளர்ந்திருந்தாலும் அவளுடைய உடலில் மான்கொடியின் வலிமை உள்ளுர ஓடியது.

'ராசா! கொம்மா, கொப்பா, தங்கச்சி எல்லாரும் சுகமே?" என அன்புடன் விசாரித்தாள் செல்லம்மா ஆச்சி.

'தம்பி! பாலைக் குடிச்சிட்டுச் சேட்டைக் கழட்டி ஆச்சியிட்டைக் குடுத்திட்டுத் தாமரையைக் கற!.. இண்டைக்கு நல்ல வெய்யில் எறிக்கும்!.. உடும்புக்குப் போவம்!" என அதிர்ந்த சிங்கராயர் தொடர்ந்து, 'மனுசி!.. நாயளுக்கு சோத்தைக் கீத்தை வைச்சிடாதை! வயிறு காஞ்சால்தான் உடும்பிலை போவினம்!" எனக் கட்டளையிட்டுவிட்டு மிகத்துரிதமாகப் பாலைக் கறந்துகொண்டார்.
  
பருத்த பாற்கலயங்கள் நிறைந்து நுரைக்க, அவற்றின் பாரம் கைகளை இழுக்க, பாட்டனும் பேரனும் ஆச்சியிடம் அவற்றைக் கொடுத்துவிட்டு, கிணற்றடிக்குச் சென்று கைகால் அலம்பிக்கொண்டனர்.

ஆச்சி கொடுத்த அரிசிப் பிட்டையும், ஆடை தடித்த தயிரையும் அவசரமாகச் சாப்பிட்டு முடித்த சேனாதி, வேட்டைக்குக் கிளம்புவதற்காக சிங்கராயரின் பழைய ஸ்ரீவன்ஸ துவக்கை எடுத்து முறித்தான். அந்தச் சப்தம் கேட்டதுமே சிங்கராயரின் வேட்டைநாய்கள் நான்கும் வீட்டைச் சுற்றிவந்து வேட்டம் பாய்ந்து உறுமி, மயிரைச் சிலிர்த்து வேட்டைக்குச் சன்னத்தம் செய்துகொண்டன.

அந்த நாய்கள் அத்தனையுமே சிங்கராயர் தேடித்தேடிக் குட்டிகளாகவே கொண்டுவந்து வளர்க்கப்பட்டவை. வேட்டை நாய்களுக்குரிய இலட்சணங்களான, காலில் கொடித்தடக்கு, விறைத்த வால், நிமிர்ந்த காதுகள் போன்ற அம்சங்கள் இருக்கின்றனவா என அவர் தேர்ந்து தேடியவை. முதன்முதலில் அந்தக் குட்டிகளுக்கு வேறு யாரையும் பால் வைக்கவிடாது தானே ஊட்டுவார். யார் கையில் முதலில் பால் குடிக்கின்றதோ, அவருடைய குணத்தைக் கொண்டதாகவே அந்த நாய்க்குட்டி வளரும் என்று ஓர் எண்ணம் இப்பகுதியில் உண்டு. அதை நிறுவுவது போலவே அவருடைய நாய்களான ரைகர், ஐயர், யோசே, ஜெயக்கொடி ஆகிய நான்குமே அஞ்சா நெஞ்சமும், வினைமுடிக்கும் திறனும், கூர்மையான மதிநுட்பமும், நன்றியும் மிக்கவையாகப் பிரசித்தி பெற்றிருந்தன.

மான்கொம்புப் பிடியிட்ட நீண்ட வில்லுக்கத்தியை இடுப்பில் சொருகிக்கொண்டு, கையில் காட்டுக்கத்தி சகிதம் வாயில் நெடுங்காம்புச் சுருட்டுப் புகைய, சிங்கராயர் முன்னே நடக்க சேனாதி அவரின் பின்னே, தோளில் துவக்குடன் நடந்தான். நாய்கள் ஆர்ப்பாட்டமாக உறுமிச் சிலிர்த்துக் கொண்டு காடேறும் இடத்தை நோக்கி ஓடின.

சோனாதி திரும்பி, பழைய பாடசாலைக் கட்டிடம் இருக்கும் பக்கமாகப் பார்த்தான். அந்தக் கட்டிடத்துக்கு அருகே, புறம்பாக பட்டாப்பத்து ஓலைகளினால் அமைக்கப்பட்ட அழகியதொரு சிறு குடிசைக்கு முன்னே நந்தாவதி நிற்பது தெரிந்தது. நாய்களின் அரவங்கேட்டு அவள் வெளியே வந்திருந்தாள். அவளைக் கண்ட சேனாதி கையை அசைத்து விடைபெறவே, அவளும் சிரித்தவாறே கையை அசைத்து விடைகொடுத்தாள்.

அவர்கள், பழையாண்டாங்குளத்திலிருந்து மாங்குளம் விதானையார் மரம் இழுத்த லொறித் தெருவால் பழையாண்டாங்குளக் காட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். நாய்கள் நான்கும் அவர்களோடு பின்னே செல்லாது காடுலாவி வந்து கொண்டிருந்தன. அரைமைல் தூரத்திற்கும் அப்பால், பனையடி மோட்டைக்கு அருகே ஐயர் நாய் சட்டென்று விரைந்து ஓடியது. அத்துடன் நாய்களைக் காணவில்லை.

சில நிமிடங்களின் பின்னர் ஒரு பக்கமாகச் சந்தடி கேட்கவே, உற்றுக் காதுகொடுத்துக் கேட்ட சிங்கராயர், 'ஓடு தம்பி! நாயள் உடும்பைப் புடிச்சுப் போட்டுதுகள்!" என்று சொல்லவும் சேனாதி கையில் துவக்குடன் காட்டினுள் பாய்ந்தான். உடனேயே செல்லாவிடின் பிடித்த உடும்பை நாய்கள் கடித்துக் குதறிச் சிதைத்துவிடும். முதலில் பிடிக்கின்ற எந்த உயிரையும் அவை தமக்கிடையில் பிய்த்தெடுத்துவிடும்.

ஒவ்வொரு பக்கமாக உடும்பைக் கௌவிக்கொண்டு நின்று உறுமிய நாய்களை அதட்டி, உடும்பின் வால் தண்டையை ஒரு கையினாலும், தலையை மறுகையினாலும் பிடித்து, நாய்களுக்கு எட்டாது மேலே உயர்த்திப் பிடித்தவாறே சேனாதி பாதைக்கு வந்துபோது, அங்கு சிங்கராயர் பாதையில் பழையாண்டாங்குளப் பக்கமாகப் பார்த்தவாறே தரையில் குந்தியிருந்தார்.

'என்ன கவுறனோ? பொட்டையோ?" எனக் கேட்டுக்கொண்டே அவனிடம் உடும்பை வாங்கி, அதன் வாலை ஒரு பாதத்தினாலும், தலையை மறு பாதத்தினாலும் மிதித்தவாறே, வில்லுக்கத்தியை உடும்பின் கெட்டித்திருந்த அலகுகளுக்கிடையில் செலுத்தி அகலச்செய்து, அதன் கீழ்த் தாடையை கையினால் முறித்தார் சிங்கராயர். இவ்வாறு செய்யாவிடில் உடும்பு கடித்துவிடும். குந்தியிருந்தவாறே, உடும்பைக் கையில் வசதியாக எடுத்துச் செல்வதற்காக, அதன் வால் தண்டையை வளைத்து வேட்டை கட்டினார். அதன்பின், வளையாமகக் கிடந்த உடும்பைத் தரையில் ஒரு இடத்தில் மூன்று தடவைகள் சுற்றிவிட்டு, அதன்மேல் அருகில் கிடந்த இலைச் சருகுகள் சிலவற்றை எடுத்துப் போட்டு, மூன்று முறை துப்பிவிட்டுத் தரையில் உட்கார்ந்திருந்த சேனாதியை நோக்கி, 'தம்பி! நீ எழும்பு!" என்றார். யார் முதலில் இருந்த இடத்தைவிட்டு வேட்டைக்கென முதலில் எழுகின்றார்களோ அவர்களுடைய ராசிக்கு ஏற்பவே மேற்கொண்டு வேட்டை கிடைக்கும் அல்லது கிடைக்காது. இவையெல்லாம் இங்கு வேட்டைக்குச் செல்கையில் அனுஷ்டிக்கப்படும் வழக்கங்கள். சிலவற்றுக்கு விளக்கமுண்டு.

'நெடுகத் தெருவாலேயே போனால் உடும்பு புடிக்கேலாது!.. கிழக்காலை விழுந்து பழையாண்டாங்குளத்துக் கிராவலுக்கை மிதப்பம்!" என்ற சிங்கராயர், அடர்ந்த காட்டினுள் கிளைகளையும், செடிகளையும் விலக்கிக்கொண்டு முன்னே நடந்தார்.

அவர்கள் சுமார் ஐந்து மைல் தூரம் காட்டில் நடந்து, வெய்யில் உச்சிக்கும் மேலாகச் சரிந்துவிட்ட வேளையில் பழையாண்டங் குளத்துக் கராவலை வந்தடைந்திருந்தூர்கள். சோனாதிக்குத் தொண்டையை வறட்டியது. சிங்கராயரோ  அசராது இன்னமும் பத்து மைல்கள் தொடர்ந்து நடப்பார் போன்றிருந்தது. சற்;றுப் பின்தங்கிய சேனாதியைப் பார்த்து, 'என்ன மோனை? களைச்சுப் போனியே?.. இன்னும் கொஞ்சத் தூரம் போட்டால் கல்லுமோட்டை வந்திடும்!.. தண்ணி குடிக்கிலாம்!" என சிங்கராயர் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, நாய்கள் எதுவோ சுவடு கண்டு முனகின.

அவை தம் பிடரி மயிரைச் சிலிர்த்து முனகிய விதத்தில், ஏதோவொரு வினைமிருகத்தின் சுவடுதான் அவைக்கு விழுந்திருக்கின்றது என்பதை உணர்ந்துகொண்ட சிங்கராயர், 'தம்பி! ஆனையோ கறடியோ தெரியேல்லை!.. எதுக்கும் நீ ஒரு பெருமரத்தடியிலை நிண்டுகொள்!" எனச் சொல்லிவிட்டுத் துவக்கை வாங்கிக்கொண்டு, விரலைச் சொடித்து சூ! வென மெல்ல நாய்களை ஏவினார். எதற்கும் துணிகின்ற ரைகரே இப்போதும் முன்னே அவதானமாகச் செல்ல, மற்ற நாய்கள் அதனைத் தொடர்ந்தன.

சிங்கராயர் குண்டுத் தோட்டாவைத் துவக்கில் போட்டுச் சாவலையிழுத்து, துவக்கை நாய்கள் சென்ற பக்கமாக நீட்டிப் பிடித்துக்கொண்டார். அவரது ஆட்காட்டி விரல் எந்த வினாடியும் அழுத்தத் தயாராகக் கள்ளனில் பதிந்திருந்தது.

சில நிமிடங்களுக்குக் காட்டில் ஒரு பயங்கர அமைதி நிலவியது. சோனாதியின் முகத்தில் வியர்வை துளிர்த்தது.

திடீரெனக் காடே அதிரும் வண்ணம் ஏதோ ஒரு பெருமிருகம் அவர்கள் நின்றிருந்த இடத்தை நோக்கி வருவது கேட்கவே, சிங்கராயர் சேனாதியை மரத்தில் ஏறும்படி சைகை செயய்துவிட்டு, நீட்டிய துவக்குடன் உஷாராக நின்றுகொண்டார்.

பெருமரத்தில் ஏறி அதன் கவையொன்றில் நின்றிருந்த சேனாதி, தனக்கு முன் நிகழ்வதை விளங்கிக் கொள்ளமுடியாது திகைத்துப் போனான். இதென்ன? புலி குழுமாட்டைக் கடிக்கின்றதா அல்லது குழுவன் புலியைக் கொம்பில் சுமந்து வருகின்றதா? என்பதைப் புரியாமல் அவன் இருக்கையிலேயே, நாய்களைத் துரத்திவந்த பழையாண்டாங்குளத்துக் கலட்டியன், மனிதவாடை விழுந்ததும் இன்னும் வெருட்சி கொண்டதாகச் சிங்கராயரை நோக்கித் திரும்பியது.

சிங்கராயர் வெடிiவைக்கவில்லை. எதற்கும் இலகுவில் அசந்துபோகாத அவரே அந்தப் பெரிய கலட்டியனைக் கண்டு வியந்துபோனார். இத்தனை பெரிய கரும்புலியைக் கொன்று தன் கொம்பில் கொண்டுதிரியும் அதன் பலத்தையும் அழகையும், துணிவையும் அவரால் சிலாகிக்காமல் இருக்கமுடியவில்லை. சிறு பிராயத்திலிருந்தே பட்டிக்குள் எருமைகளின் கால்களுக்கிடையில் தவழ்ந்து வளர்ந்த அவருக்கு, இத்தகைய ஒரு அரிய நாம்பனைக் கொல்வதா என்ற எண்ணமே அவரைத் தயங்க வைத்தது. அவர் வெடிவைக்காததைக் கண்ட நாய்கள் கணத்தினுள், சிங்கராயரை நோக்கிச் சீறிய கலட்டியனைத் திசைதிருப்பும் முயற்சியில் இறங்கின.

காட்டில் யானை, கரடி, சிறுத்தை போன்ற வினைமிருகங்கள் வேட்டையாடுபவரைத் தாக்க வந்தால், வேட்டையில் திறமைமிக்க நாய்கள் அவற்றைக் கடித்துத் தம்பக்கமாகத் திசைதிருப்பி, அவற்றின் பிடியிலோ கடியிலோ சிக்கிக் கொள்ளாது, வேறொரு பக்கமாகப் போக்குக்காட்டி திசைதிருப்பிவிட்டு, வேறு திசையினால் சுற்றிக்கொண்டு மறுபடியும் மனிதரிடத்தில் வந்துவிடும். இது சிங்கராயரின் நாய்களுக்குக் கைவந்த கலை.

சிங்கராயரை நோக்கிப் பாய்ந்த கலட்டியனின் செவியை வெடுக்கெனப் பாய்நது கடித்த ஐயர் நாய், கலட்டியன் திரும்பித் தாக்குவதற்குள் இலாவகமாக ஒதுங்கிக் கொண்டது. இதற்குள் அவற்றுள் மிகப்பெரிதான ரைகர், கலட்டியனின் பின் தொடையைக் கவ்வி இழுத்தது. நாய்கள் நான்கினதும் தொந்தரவு பொறுக்க முடியாது மனிதரை மறந்து, ஓடும் நாய்களைத் துரத்தியது கலட்டியன்.

'இறங்கி வா சேனாதி!" என அவர் அழைத்தபோது சிங்கராயர் இன்னமும் கலட்டியன் ஏற்படுத்திய வியப்பிலிருந்து விடுபடாதவராய் தனக்குத் தானே பேசிக்கொண்டார்.

'என்ரை சீவியத்திலை இப்பிடி புலியைக் கொம்பிலை கொண்டு திரியிற ஒரு குழுவனை நான் காணேல்லை.. .. இதுமட்டும் ஊருக்கை வராமல் இருக்கவேணும்!" என உறுமிக்கொண்டார்.

'ஏனப்பு? இது ஊருக்கை வந்தால் என்ன செய்யும்?" ஆவலுடன் கேட்டான் சேனாதி.

'என்ன செய்யுமோ..? நல்ல கதை! .. எங்கடை பட்டிக் கேப்பை நாம்பனை அடிச்சுக் கொல்லும். எருமையளைத் தலம் மாத்திக் காட்டிலை கொண்டுபோகும்.. ஆக்கள் ஆரும் குறுக்கமறுக்க வந்தால் குடல் சரியக் கொம்பாலை வெட்டிப்போடும்!". சிங்கராயரின் முகம் இறுகிக் கிடந்தது.

'ஏனப்பு எங்கடை கேப்பை மாப்பிளை நாம்பன் இதை இடிச்சுக் கலைக்க மாட்டுதோ?" சேனாதி ஆதங்கத்துடன் கேட்டான்.

சிங்கராயர் சிரித்தார். 'தம்பி! அது என்ன இப்ப குழந்தைக் கண்டுதானே! உருப்படி பெரிசெண்டாலும் அது வேறை இது வேறை.. காட்டிலை குழுமாடு ஒண்டுதான் பெரிய ஆபத்தான முறுகம்! ஆனை கறடி புலியைக்கூடக் கலைச்சுப் போடிலாம்.. ஆனால் இப்பேர்ப்பட்ட குழுவனை மடக்கிறதெண்டால் லேசுப்பட்ட வேலையில்லை!"

காட்டுக் குறைக்கும் மேலாகப் பொழுது சாய ஆரம்பிக்கவே அவர்கள் நாய்களையும் அழைத்துக்கொண்டு பாதையை மாற்றி ஆண்டாங்குளத்தை நோக்கி நடந்தார்கள். வருகின்ற வழியில் மேலும் மூன்று நான்கு உடும்புகளைப் பிடித்துக்கொண்டு அவர்கள் கிராமத்தை வந்தடைந்தபோது செக்கல் பொழுதாகவிட்டிருந்தது.
(வளரும்)


மேலும் சில...
வாசகர்களுடன்..
வட்டம்பூ-01
வட்டம்பூ - 02
வட்டம்பூ - 04
வட்டம்பூ - 05
வட்டம்பூ - 06
வட்டம்பூ -7-8
வட்டம்பூ - 09
வட்டம்பூ - 10
வட்டம்பூ - 11
வட்டம்பூ - 12
வட்டம்பூ - 13
வட்டம்பூ - 14
வட்டம்பூ - 15
வட்டம்பூ - 16
வட்டம்பூ - 17
வட்டம்பூ - 18
வட்டம்பூ - 19
வட்டம்பூ - 20 - 21 -
நிலக்கிளி - வட்டம்பூ நாவல்களும் நானும் - 01
நிலக்கிளி, வட்டம்பூ நாவல்களும், நானும் - 02
நிலக்கிளி,வட்டம்பூ நாவல்களும், நானும் - 03

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 17 Jun 2026 14:57
TamilNet
18 May is not a day for empty remembrance. It is a day that tests whether Eezham Tamils will remain faithful to the political meaning of Mu'l'livaaykkaal and Vaddukkoaddai, or allow both to be folded back into a ?safer?language of accommodation. The issue is not whether formulas can be drafted. It is whether a people whose claim rests on homeland, sovereignty, and the insistence that Tamil political status was never validly surrendered should once again be pushed into recasting that claim as an internal arrangement within the very state whose legitimacy they dispute. That, in essence, is what lies behind the current push toward ?maximum devolution?and similar formulas. Rather than opening a new path, it risks drawing Eezham Tamils back into the constitutional grammar of containment.
Sri Lanka: 18 May is not for repackaging surrender


BBC: உலகச் செய்திகள்
Wed, 17 Jun 2026 14:57


புதினம்
Wed, 17 Jun 2026 14:44
















     இதுவரை:  28842570 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5795 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com